Psalms - Chapter 21
Holy Bible

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. (சேலா)
3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4 அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.
5 நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று; மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்,
6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.
7 ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்; உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.
8 உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.
9 நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்; ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.
10 அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்; அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.
11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.
12 நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்; அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.
13 ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்; நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.

Holydivine