Psalms - Chapter 12
Holy Bible

1 ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
2 ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்; தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.
3 தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!
4 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!
5 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன்; அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்' என்கின்றார் ஆண்டவர். 
6 ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7 ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.
8 பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்; மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

Holydivine