Psalms - Chapter 48
Holy Bible

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 
3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.
4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;
5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.
6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.
7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர்.
8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)
9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 
10 கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.
11 சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக!
12 சீயோனை வலம் வாருங்கள்; அதைச்சுற்றி நடைபோடுங்கள்; அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள்.
13 அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்; அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்; அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும்.
14 'இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்; அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.'

Holydivine