Psalms - Chapter 4
Holy Bible

1. எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது
எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2 மானிடரே! எவ்வளவு காலம்
எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்
பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3 ஆண்டவர் என்னைத் தம்
அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும் போது
அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;
– இதை அறிந்துகொள்ளுங்கள்.
4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள். (சேலா)
5 முறையான பலிகளைச் செலுத்துங்கள்;
ஆண்டவரை நம்புங்கள்.
6 ‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’
எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது
முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7 தானியமும் திராட்சையும்
நன்கு விளையும் காலத்தில் அடையும்
மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை
நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8 இனி, நான் மன அமைதியுடன்
படுத்துறங்குவேன்; ஏனெனில்,
ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன்
வாழச் செய்கின்றீர்.

Holydivine