Psalms - Chapter 39
Holy Bible

1 'நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்; பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்' என்று சொன்னேன்.
2 நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்; நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்; என் வேதனையோ பெருகிற்று. 
3 என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று; நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது; அப்பொழுது என் நா பேசியதாவது:
4 'ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும்; அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன்.
5 என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)
6 அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்.
7 என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.
8 என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்; மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும்.
9 நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்; ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே.
10 நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்; உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்.
11 குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது பூச்சி அரிப்பதுபோல் அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்; உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)
12 ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!
13 நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.

Holydivine