Psalms - Chapter 73
Holy Bible

1 உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளதினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்! 
2 என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன். 
3 ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன். 
4 அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது. 
5 மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை. 
6 எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது. 
7 அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன; அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன. 
8 பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்; இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். 
9 விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது. 
10 ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள். 
11 'இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?' என்கின்றார்கள். 
12 ஆம்: பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். 
13 அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா? 
14 நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன். 
15 "நானும் அவர்களைப்போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.
16 ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்; ஆனால், அது பெரிய புதிராயிருந்தது. 
17 நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். 
18 உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்; அவர்களை விழத்தட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர். 
19 அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்! 
20 விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்; என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர். 
21 என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின. 
22 அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன். 
23 ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர். 
24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர். 
25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறுவிருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை. 
26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார். 
27 உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும். 
28 நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன். 

Holydivine