Psalms - Chapter 56
Holy Bible

1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர்.
3 அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்.
4 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்?
5 என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்; அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே.
6 அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர்; என் உயிரைப் போக்குவதற்காக என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.
7 அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத் தப்பமுடியுமோ? கடவுளே, சினம் கொண்டெழுந்து இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.
8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?
9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்.
10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவனின் வாக்கை நான் புகழ்கின்றேன்.
11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?
12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.
13 ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ!

Holydivine